பலாலியை விடச் சொல்லிக் கோர வேண்டாம்: யாழில், 13 ஆயிரம் படையினரே உள்ளனர்- ஹத்துருசிங்க! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பலாலியை விடச் சொல்லிக் கோர வேண்டாம்: யாழில், 13 ஆயிரம் படையினரே உள்ளனர்- ஹத்துருசிங்க!

பலாலியை விடச் சொல்லிக் கோர வேண்டாம்: யாழில், 13 ஆயிரம் படையினரே உள்ளனர்- ஹத்துருசிங்க!

Written By NIsha on Saturday, August 3, 2013 | 10:57 AM

தனியார் காணிகள் மற்றும் வீடுகளிலிருந்தும் இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். அரியாலையில் இடம்பெற்ற இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

பல வருடங்களுக்குப் பின்னர் இந்த வீடுகளை பொது மக்களிடம் கையளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். இது அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் மேற்கொள்ளவில்லை.

யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் யாழ். நகரில் முக்கிய இடங்களில் இருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி அந்த இடங்களை பொது மக்களிடம் வழங்கியிருக்கின்றோம். மிகவிரைவில் தனியார் காணியில் உள்ள 52 படையணி, மற்றும் 513, 515 ஆகிய படைப்பிரிவுகள் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்கும் அரச காணிகளுக்கும் மாற்றம் செய்யப்படவுள்ளது. அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் காணிகளில் இருந்து வெளியேறவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றார்.

இதனால் அவரின் வேண்டுகோளுக்கிணங்க காணிகளை விடுவித்து வருகின்றோம். இருந்தாலும் பலாலியை விடச் சொல்லிக் கோரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

2008ம் ஆண்டுக்கு முன்னர் யாழில் 43 ஆயிரம் படையினர் இங்கிருந்தனர். முப்பதாயிரம் இராணுவத்தினர் குறைக்கப்பட்டு தற்போது 13 ஆயிரம் படையினர் நிலைகொண்டுள்ளனர் என்றார். அத்துடன் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற பேதங்களை விடுத்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற எண்ணத்தில் செயற்படவேண்டும் என்றும் அவர் கோரினார்.

எனவே யுத்தத்தின் பின்னர் யாழ். குடாநாட்டிலிருந்து படையினர் முற்றாக அகற்றப்பட்டு வருகின்றனர்.

எனவே மக்கள் வாழும் பகுதிகளுக்குள் இராணுவம் எதிர்காலத்தில் இருக்கப் போவதில்லை. அவர்கள் அனைவரும் பலாலிக்கு கொண்டு செல்லப்படுவர். அந்த வகையில் இராணுவம் வெளியேறவேண்டும், பலாலியிருந்தும் இராணுவம் போகவேண்டும் என யாரும் கேட்க கூடாது. நாங்கள் இதனை அரசியல் நோக்கத்திற்காகச் செய்யவில்லை. இந்த நாட்டில் சிங்கள, தமிழ் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும் என்றார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com