திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் 2 மாத குழந்தை: உங்களால் நம்ப முடிகின்றதா? - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் 2 மாத குழந்தை: உங்களால் நம்ப முடிகின்றதா?

திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் 2 மாத குழந்தை: உங்களால் நம்ப முடிகின்றதா?

Written By NIsha on Thursday, August 1, 2013 | 7:38 AM

தமிழகத்தில் 2 மாத பச்சிளம் குழந்தையொன்று அடிக்கடி தீப்பிடித்து எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த டி.பரங்கணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளான கர்ணன்(26), ராஜேஸ்வரி(23) இவர்களுக்கு ராகுல் என்ற இரண்டு மாத கைக் குழந்தை உள்ளது.

ராஜேஸ்வரி தன் தாய் வீடான மோழியனூரில் தங்கியிருந்த போது, இரண்டு மாத ஆண் குழந்தை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீக்காயத்திற்கு சிகிச்சை அளித்த பின்பும் அதைத் தொடர்ந்து இரண்டு முறை தீப்பிடித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து புதுச்சேரி அபிஷேகபாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், குழந்தையுடன் ராஜேஸ்வரி தங்கியிருந்த போதும் இரண்டு முறை தீப்பிடித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் அருகே உள்ள கர்ணனின் சொந்த ஊரான டி.பரங்கணியில் தங்கியிருந்த போதும், மர்மமான முறையில் மீண்டும் குழந்தை தீ பற்றி எரிந்தது, வீடும் எரிந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி தற்கொலைக்கு முயன்றுள்ளார், பின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் குழந்தை ராகுலை சிகிச்சைக்காக உப்பு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், இரண்டு மாத குழந்தைக்கு உடலில் பல்வேறு தீக்காயங்கள் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொல்லைகள் இல்லை. தீக்காயங்களும் சில நாட்களில் சரியாகி விடுகின்றன. இது புரியாத புதிராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குழந்தை தீப்பிடித்தும் எரியும் செய்தி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பரவியது. குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையின் உடலில் இருந்து மண்எண்ணை வாசனை வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து, அதிசய குழந்தை ராகுல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டான். குழந்தை தீப்பற்றி எரிவது குறித்து பெற்றோர் கூறிய தகவல் சென்னை டாக்டர்களையும் மிரள வைத்துள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் ராகுல் உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது.

குழந்தைகள் நல வார்டில் சிறப்பு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். குழந்தைகள் நலம், சிறுநீரகம் துறை மற்றும் தோல் நோய் துறை டாக்டர்கள் முழுமையாக இன்று பரிசோதனை செய்தனர். குழந்தை ராகுலுக்கு உடலில் தீப்பற்றி எரியும் அபூர்வ நோய் ஏற்பட்டுள்ளது.
'இது மருத்துவ உலகில் அதிசயம். இப்படிப்பட்ட குழந்தைகள் அரிதாகத்தான் பிறக்கும். அப்படித்தான் ராகுலும் பிறந்துள்ளான். இந்த குழந்தை அதிசய குழந்தை என்றே கூறலாம். தமிழ்நாட்டில் முதன் முதலாக இப்போதுதான் இதுபோன்று அதிசய குழந்தை பிறந்து இருக்கிறது' என்று ராகுலை பரிசோதித்த குழந்தைகள் நல பேராசிரியர் நாராயணபாபு தெரிவித்தார்.

ராகுலுக்கு தற்போது தீக்காயத்திற்கான பொதுவான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் உடலில் தீப்பிடிக்காமல் இருக்க தண்ணீர், தீ தடுப்பு சாதனங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. ஒரு டாக்டர் மற்றும் நர்ஸ் குழந்தையை கண்காணித்து வருகிறார்கள். ராகுலின் பெற்றோரும் அருகில் இருந்து ராகுலை கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் தந்தை கர்ணன், குழந்தை பிறந்ததில் இருந்தே ஏதாவது ஒரு விபரீதம் நடந்து கொண்டு தான் உள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம், குழந்தையை நாங்கள் வளர்ப்பதா அல்லது அரசிடம் ஒப்படைப்பதா என குழப்பமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com