தீவிரவாதி யாசின் பட்கல்: அதிரவைக்கும் உண்மைகள்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » தீவிரவாதி யாசின் பட்கல்: அதிரவைக்கும் உண்மைகள்!

தீவிரவாதி யாசின் பட்கல்: அதிரவைக்கும் உண்மைகள்!

Written By NIsha on Monday, September 2, 2013 | 3:34 AM

சமீபத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி யாசின் பட்கல், தனது 18 வயதிலேயே ஆப்கானிஸ்தான் சென்று அமெரிக்க படைகளுக்கு எதிராக போராட விரும்பியது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் டெல்லி, மும்பை என பல்வேறு பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை நிறைவேற்றியவர் தீவிரவாதி யாசின் பட்கல். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்க நிறுவனர்களில் ஒருவரான இவர், கடந்த 28ம் திகதி தனது கூட்டாளி அசதுல்லா அக்தருடன் கைது செய்யப்பட்டார்.

நேபாள எல்லை அருகே பீகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டம் ராக்சுவல் அருகே கைது செய்யப்பட்ட இவர்கள், டெல்லி கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12 நாள் தேசிய புலனாய்வு அமைப்பு பொலிஸின் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் இரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணையில் தீவிரவாதி யாசின் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து டெல்லி பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட யாசின் பட்கல் தீவிரவாதம் மீது பயங்கர வெறி உடையவன். சிறிய ரக எந்திர துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவன்.

இதற்காக டெல்லி புறநகர் பகுதியான நங்லோய் பகுதியில் சட்ட விரோதமாக ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கினான். இதிலிருந்தே அவனது தீவிரவாத வெறி விளங்குகிறது. இந்த நிறுவனத்தை கடந்த 2011ம் ஆண்டு டெல்லி பொலிஸ் சிறப்பு பிரிவினர் கண்டுபிடித்து, யாசின் பட்கல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பொலிசாரிடம் சிக்காத யாசினுக்கு பிணையில் வெளிவரமுடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்தின. அப்போது 18 வயதேயான யாசின் பத்கல் ஆப்கானிஸ்தான் சென்று நேட்டோ படைகளுக்கு எதிராக போராட விரும்பி உள்ளான். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட தீவிரவாதி யாசின் இந்திய-நேபாள எல்லையில் சுமார் 110 கிலோ மீட்டர் பகுதியில் சுதந்திரமாக நடமாடிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. யாசின் கைது செய்யப்பட்ட ராக்சுவலில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நேபாளத்தின் பிர்கஞ்ச் பகுதிக்கு ஆட்டோ ரிக்சாவில் செல்ல ரூ.35 மட்டுமே. இந்த பகுதியில் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாததால், இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் எவ்வித ஆவணங்களுமின்றி சாதாரணமாக சென்று வர முடியும்.

இங்குள்ள மக்களுக்கு உணவு தானியங்கள், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இரு நாட்டில் இருந்தும் வருகின்றன. மேலும் ராக்சுவல் பகுதியை சேர்ந்த பலர் நேபாளத்தின் பிர்கஞ்ச் மற்றும் மோதிகாரி பகுதிகளில் கடைகளும் நடத்தி வருகிறார்கள். இங்குள்ளவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து வாழ்கிறார்கள். திருமணத்துக்குப்பின் அவர்கள் இரட்டை குடியுரிமை பெற முடியும். இவ்வாறு எல்லையோர பகுதியை சேர்ந்த பலர் இரட்டை குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள்.

இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி இந்தியா-நேபாள எல்லைபகுதியில் தீவிரவாதி யாசின் வெகு சுதந்திரமாக சுற்றி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

யாசின் பட்கல் கைது:

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைத் தொடங்கியவர்களில் ஒருவரான யாசின் பட்கலை (30) பிகார் மாநில போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

அவருடன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படும் ஹாதி என்ற அசதுல்லா அக்தர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆமதாபாத், சூரத், பெங்களூரு, புணே, தில்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் குற்றம்சாட்டப்பட்டிருந்த யாசின் பட்கலை பல்வேறு மாநில காவல் துறையும் மத்திய உளவுத் துறையும் தீவிரமாகத் தேடி வந்தன.

துன்டாவின் துப்பு: 

இந்நிலையில், லஷ்கர் பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டாவை கடந்த 16-ஆம் தேதி இந்திய-நேபாள எல்லையில் தில்லி போலீஸ் கைது செய்தது.

போலீஸ் காவலில் அவரிடம் விசாரணை நடத்தியபோது, இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக அவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். இந்தியா தேடும் பயங்கரவாதிகள் ஹஃபீஸ் சயீத், தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டோர் பாகிஸ்தானில் இருப்பதை உறுதிப்படுத்தி துன்டா சில தகவல்களை வெளியிட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், இந்திய-நேபாள எல்லையில் யாசின் பட்கல் பிடிபட்டார். இதுகுறித்து மத்திய உள்துறை உயரதிகாரி கூறியது:

கர்நாடக மாநிலம், பட்கலைச் சேர்ந்தவர் யாசின் பட்கல். 2008-ஆம் ஆண்டில் தனது சகோதரர் ரியாஸ் பட்கல், இக்பால் பட்கல் தொடங்கிய "இந்தியன் முஜாஹிதீன்' இயக்கத்தில் இணை அமைப்பாளராக இருந்தார்.

பாகிஸ்தானில் பயிற்சி: 

1992-ஆம் ஆண்டு அயோத்தியில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்புச் சம்பவம், 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தை இவர்கள் தொடங்கினர்.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற மூவரும் இந்தியாவில் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்க தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தில்லியின் பட்லா ஹவுஸ் பகுதியில் யாசின் பட்கல் 2008-ஆம் ஆண்டில் வசித்து வந்தார். அந்தப் பகுதியில் போலீஸார் என்கவுன்ட்டர் நடத்தியபோது அங்கிருந்து வெளியேறினார். பின்னர், தமது சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டார். 2009-ஆம் ஆண்டில் யாசின் பட்கல் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. அதன்பிறகு, அவர் தலைமறைவானார்.

வங்கதேசத்தில் நடமாட்டம்: 

இந்நிலையில், யாசின் பட்கல் பிகார் மாநில எல்லை மாவட்டங்கள் வழியாக நடமாடுவதாக மத்திய உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அடிக்கடி வங்க தேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அவர் சென்று வருவதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து, எல்லையோர மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களாக மத்திய உளவுத் துறையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். பிகார் மாநில காவல் துறையின் உயரதிகாரிகளின் அனுமதியுடன் யாசின் பட்கலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்திய-நேபாள எல்லையில் கைது:

இந்நிலையில், பிர்கஞ்ச் மாவட்டம் வழியாக வங்கதேசம் செல்வதற்காக யாசின் பட்கல் புதன்கிழமை மாலையில் வந்தார்.

அதுகுறித்து நேபாள உளவுத் துறையினர் இந்திய உளவுத் துறைக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, பிகாரின் கிழக்கு சாம்ப்ரான் மாவட்டத்துக்கு அவர் வந்தபோது உளவுத் துறையினரிடம் பிடிபட்டார்.

தனிப் படையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தன்னை யுனானி மருத்துவர் என்று கூறி யாசின் பட்கல் தப்ப முயன்றார்.

ஆனால், அவரைப் பற்றியும் அவரது அடையாளத்தையும் ஏற்கெனவே உளவுத் துறையினர் அறிந்திருந்ததால் பிகார் காவல் துறையினரிடம் யாசின் பட்கல் ஒப்படைக்கப்பட்டார்' என்று மத்திய உள்துறை அதிகாரி கூறினார்.

தில்லி கொண்டு வர நடவடிக்கை:

இதையடுத்து, "மோதிஹரி மாவட்ட முதன்மை மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி தில்லிக்கு தனி விமானத்தில் கொண்டு வர போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்' என்று பிகார் மாநில காவல் துறை இயக்குநர் அபயானந்த் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறினார்.

மத்திய அரசு உறுதி: 

யாசின் பட்கல் கைது செய்யப்பட்டதை, தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே உறுதிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து, உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறியது:

அண்மையில் தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் துன்டாவைவிட யாசின் பட்கல் மிகவும் தீவிரமான பயங்கரவாதி. சட்டப்படி இதுபோன்ற குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்' என்றார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com